December 11, 2014

2014 மகாகவி பிறந்ததின போட்டி பரிசு பெற்றவர்கள் விவரம்...

வாழ்த்துகள்......:)

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம், 

மகாகவி பாரதியின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டியின் முடிவுகளை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்தோம்.  தோழமைகள் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறியக் காத்திருப்பீர்கள் என்பதால் இதோ தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முடிவுகள்..

முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய  சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். அவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள்  சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

கவிதைப்போட்டிக்கான நடுவர்கள்: 

1. முனைவர் வ.வே.சு அவர்கள்   கவிஞர், பேச்சாளர், கட்டுரையாளர்.  தொலைக்காட்சி, வானொலி என பல மேடைகள் சந்தித்தவர். கவிமாமணி(1987) திருப்புகழ் மாமணி (1999) பாரதி விருது-Chennai Dawn-அமைப்பு(2001) விருதுகள் பெற்றவர்.  கல்லூரி ஆசிரியர். ஓய்வுக்கு முன் ஏற்றிருந்த பணி-முதல்வர், சென்னை விவேகானந்தா கல்லூரி.  கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை- திரையிசையிலும் ஈடுபாடுகொண்டவர்.  எழுதியுள்ள புத்தகங்கள்: தொடமுயன்ற தொடுவானம் (கவிதை நூல்); My review book on Kulothungan's Manuda yaaththirai வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. தற்போது: Director, Phyco Spectrum Consultants (Pvt)Ltd Chennai. அவருடைய பணிகள் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைகள் பற்றி குறிப்பிட எங்களுக்கு விருப்பம் எனினும் படிக்கும் உங்களுக்கு முடிவுகள் அறிவதிலேயே ஆர்வம் காட்டுவீர்கள் என்பதால் திரு.வவேசு ஐயா பற்றிய விவரம் இத்துடன் நிறுத்திக்கொண்டு, அடுத்ததாக  கவிதைபோட்டியில் நடுவராக பொறுப்பேற்றிருக்கும்

2. கவிமாமணி இலந்தை சு.இராமசாமி அவர்கள் இலந்தை சு இராமசாமி, காகுத்தன், வீரபத்ர வில்லவராயன் என்ற புனைப்பெயர்களை கொண்ட கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள், கவிமாமணி, சந்தத் தமிழ்க்கடல், பாரதி பணிச் செல்வர்,  சந்தக்கவிச் சிந்தாமணி என பல விருதுகளை வாங்கி தமிழன்னையின் மகுடத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார். எமக்குத் தொழில் கவிதை எனக்கூறும் இவர் Divisional engineer, Telephones  பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் 30 புத்தகங்கள் எழுதியுள்ளார். பேராசிரியர் அ.சீ.ரா வின் மாணவரான இவர். 1000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். 300க்கும் மேற்பட்ட கவியரங்கத் தலைமை சந்தவசந்தம்,  மரபுமலர்கள் குழுமங்களின் மட்டுறுத்துனராக உள்ளார். கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவுகளில் ஈடுபாடுகொண்டவர். இவர் எழுதிய நூல்களில் சில: பாரதி வாழ்வும் வாக்கும், அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள், பொருநை வெள்ளம்- கவிதைத் தொகுதி) வள்ளுவ வாயில் மற்றும் பல.

கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்

1. இராஜ.தியாகராஜன் அவர்கள் புதுச்சேரியில் வசிக்கும் இவர், இளங்கலை (பொருளாதாரம்), ஒரு கணினிப் பட்டயம் படித்திருந்தாலும் தமிழின்மீது இவர் கொண்ட காதல் வார்த்தையில் அடங்காது. நம் தமிழ்க்குடில் ஆண்டுவிழாவில் நிகழ்ந்த கவியரங்கத்திற்கு தலைமையேற்ற இவர் அனைவருக்கும் பரிச்சயமானவரே. இவரைப்பற்றிய விவரங்கள் முழுவதும் வழங்கினால் படிக்கும்பொறுமை தங்களில் இருக்குமா எனும் அளவு ஏதும் செய்திடவில்லை எனமிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக்கொள்ளும் இவர் பெற்ற விருதுகள் விவரம்: நிலவுப் பாவலன் விருது, பாவேந்தர் பற்றாளர் விருது, மகாகவி பாரதி விருது. நடுவண் அரசு ஆதரவுடன் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளன் விருது.  மின்னிதழும் நடத்திவருவதோடு, தமிழ் ஒருங்குறியில் வலைப்பூ உருவாக்கியிருக்கிறார்.  இதுவரை தோராயமாக1000த்திற்கும் அதிகமான பாக்கள் எழுதியுள்ளார்.  கணினியில், இணையத்தில் தமிழ், தமிழ், தமிழ், தமிழ், தமிழ் கூடவே கர்நாடக இசை என்று  சொல்லப்படும் தமிழிசையில் ஈடுபாடு உடையவர். இணையத்திலும், இதழ்களிலும் நிறைய எழுதியிருந்தாலும், நூலென்று இதுவரை வெளியிட வில்லை.   நான்கைந்து ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, மின்னிதழ் வாயிலாக அனைவருக்கும் பயன்படத் தருகிறார். அவருடைய வலைப்பூக்கள்:


2.முனைவர் அண்ணாகண்ணன் அவர்கள் கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 19 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். மும்பையில் இயங்கும் மொஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தமிழ் மொழியாக்கக் குழுவுக்குத் தலைவராகவும் இருக்கிறார்.

நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கவிதைப்போட்டி:

முதல் பரிசு               :      மாலினி பாலாஜி – முதல் கவிதை    

இரண்டாம் பரிசு      :      திரு.இளஞ்செழியன் – நான்..நான்..நான்..             

மூன்றாம் பரிசு         :      பிரசன்னா தமிழ் – என்னுடைய பங்கு

கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு               :       - பரிவை. சே.குமார் – வெளிநாட்டு வாழ்க்கை           

இரண்டாம் பரிசு      :       ஜாரா – என் வாழ்வில் பெண் என்பவள்

மூன்றாம் பரிசு         :       முத்துராஜ் தமிழகத்தில் அகத்தியலில் ஆணும் புறத்தியலில்                                                                          பெண்ணும் 

பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டி:

முதல் பரிசு                :     மீரா ஜானகிராமன்  -   நான் படைக்க விரும்பும் சமூகம்.

இரண்டாமிடம்          :     சித்திரப்பாவை(ஸ்டெல்லா தமிழரசி) பெண்                             
                                              விரும்பும் ஆணின் பரிணாமம்- காதலன்,   கணவன், மகன்.

மூன்றாமிடம்           :    அபிராமி உமாசங்கர் மற்றும் மணிமேகலை கைலைவாசன் 
                                              நான் படைக்க விரும்பும் சமூகம் 

குறிப்பு: மதிப்பீட்டில் அதிக வித்தியாசம் இல்லாத காரணத்தினால், நடுவர்களின் பரிந்துரையால் இருவருக்கும் மூன்றாம் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு பெற்ற அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்.
இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பெருமளவில் பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- மூன்றாம் பரிசு

நான் படைக்க விரும்பும்  சமூகம்.. - மணிமேகலை கைலைவாசன்
''பார்வைகள் வெறும் காட்சிகளைக் காண்பதற்காக
 மட்டுமல்ல..
சில தீர்வுகளைக் காண்பதற்காகவும் தான்''.

இனிதான ஒரு சமூகம் உலகமெங்கும் உருவாகவேண்டுமென்ற  ஆசை எனக்கு எப்போதும் உண்டு.

''வறுமை காணாத முகங்கள்..
வாடி நிற்காத பயிர்கள்..
அழுகை மறந்த மழலைகள் ..
சோகம் மறந்த பெண்கள் ..
வாழ்வை நேசிக்கும் முதிய குழந்தைகள் ..
அழகைமட்டும் சுமக்கும் இயற்கை..
அழியாத நட்பு..
என்று எத்தனையோ  ..எத்தனையோ..
பாரதி மனம் மகிழ் வான்...என் நம்பிக்கைகளோடு  தொடர்கிறேன்.

உலகப்படம் கண்முன்னே எத்தனை அழகாய் சுழல்கிறது பாருங்கள் ?
ஆனால் அதற்குள் வாழும் சமுதாயம் ?  ?..
முழுமையான  அழகோடு தானா..?
வினாக்கள் மேலும் மேலும் வினாக்களாகவே தொடர்கின்றன.விடைகள்..இன்னமும் கண்டுபிடிக்கப் படாதவைகளாகவே.

       மனித இனம் இயற்கையுடன் சேர்ந்து படைக்கப் பட்ட விதம் .நோக்கம் மகிழ்ச்சி மட்டுமே.
தனி மனிதனின் சந்தோசங்களில் சமுதாயத்தின் பங்கும் 
சமுதாயத்தின் முன்னேற்றங்களில்  தனிமனிதனது பங்கும் கட்டாயம் இருக்கவேண்டியது அவசியமே.

           கூட்டுக்  குடும்பங்களாக மனிதன் வாழ நேரிட்ட போதுஒவ்வொரு மனிதனுடைய மகிழ்ச்சியும் உடனுக்குடன் பகிரப்பட்டது.பிரச்சனைகள் ,துன்பங்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன.மன அழுத்தங்களற்ற,நோய்களற்ற இனிய சமுதாயம் மிக மிக அழகாக வாழ்த்தப்பட்டது.ஆனால் இன்று..??..தனித் தனிக் குடும்பங்கள்..தனித் தனிக் கவலைகள் தனியே உணவு தனியே உறக்கம் என்று தன்னைச் சுற்றி துன்ப   வேலி         போட்டு வாழும் மனிதன்.....விளைவு..?
இசையைத் தொலைத்த மூங்கில் காடு போலத் தான்.

                பெண்கள் பக்கம் பார்வைவையை கொஞ்சம் நகர்த்துகிறேன்.
வாழ்வியலில் பெண் அனுபவிக்கும் துன்பங்கள் ஆணை விட அதிகமென்பேன்.அதிக மனோதிடமும் ,மகா சக்தியும் கொண்டவள் பெண்தான்.ஆனாலும் அவள் திறமைகள் பெருமைகளைத் தட்டிக் கொடுக்கும் ஆணினம் மிகக் குறைவே.பெண்ணின் நிறை குணங்களைப் போற்றிட ஆண்கள் முன்வர வேண்டும்.
     தன்னில் பாதி ..  தன்    உணர்வில் பாதி உயிரில் பாதி என்று திருமண ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் கூட பெண்ணின் முன்னேற்றம்  கண்டு சற்று எரிச்சலடைவதைக் காண்பீர்கள்.இது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்றே.
தாயே ஆனாலும் ,தாரமே ஆனாலும் மகளோ..,மருமகளோ,பேத்தியோ பாட்டியோ ஆனாலும் பெண் போற்றப்படவேண்டியவளே..
பெண் போற்றப்படும் இல்லங்களில் என்றும் நிரந்தர மகிழ்ச்சியே.மாறாக பெண் துன்புறுத்தப் படும் வீடுகளைப் பாருங்கள் அங்கே நிம்மதி தூரமே.
அடிப்பது  ,உதைப்பது மட்டும் துன் புறுத்தல் அல்ல..வார்த்தைகளால் நோகடிப்பதும் தான்.
பெண் பூமி என்று புகழப் படுகிறாள்.உயிரைப்பிரசவித்து தானும் மறு ஜென்மம் கண்டு தாய் எனும் பிறவி காண்கிறாள்.பெண்மையைப் போற்றிடும் சமுதாயத்தை எதிர்பார்க்கிறேன்.

 மழலைகளிடம் வருகிறேன் ..
.சிறுவர்கள் சரியான முறையில் வளர்க்கப் படுகிறார்களா..?என்ற கேள்விக்கு   இல்லை என்ற பதில் தான் எனது.வேலை வேலை என்று இரவு பகலாக உழைப்பிலேகவனம்  கொண்டவர்களால் பிள்ளைகளுக்கான பாசத்தைக் கூட சரிவர வழங்க முடியாது.
''ஓயாத தொலைக்காட்சி நாடகங்களின் கவனம் பெண்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்க மழலைகளோ  பசி மயக்கத்தில்..''
புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே ..
பாப்பா பாட்டு பாடிய பாரதி மீண்டும் வந்தால் குழந்தைகளை சரிவரக் கவனிக்காத பெற்றோரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவைத்தாலும் வைப்பான்.
           மின் கணணி.பொம்மை கூட ஆயிரம் இருந்தாலும் தாலாட்ட சில கணங்கள் போதுமே..
தாலாட்டுவது  தாய்மை மட்டுமே.தாலாட்டு மறுபடி தாயின் வாயால் 
இசைக்கப் படுமா..?என்ற நப்பாசை எனக்குள்.
அத்தனை உறவுகளையும் ஒரு பாடலுக்குள் சொல்லித் தருவது தாலாட்டல்லவா...?

   அடுத்த படியாக   முதியவர்களின்  எதிர்காலம்  எனக்குள்  வினாவாகிறது.முதுமை அனுபவங்களின் பொக்கிஷம்.ஆனாலும் முதுமை காரணமாக எதற்கும் உதவாதவர்கள் என்றெண்ணி  உடைந்த நாற்காலி போலே ஓரங் கட்டப்படுதல் வேதனை..
உடைகிறது அவர்களின் மனங்களும் இங்கே...
கணவன் மனைவி ..அவர்கள் முதுமைக் காலத்தில் இருந்தாலும் தனித் தனியே அவர்கள் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் வாழவேண்டும் என்று யாரும் ஆலோசனை சொல்லாதீர்கள்..செய்யாதீர்கள்.பிள்ளைகள் மீது கொண்ட பாசம் காரணமாக அவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டாலும் மனதளவில் நொந்தும் வெந்தும்   போயிருப்பார்கள்.கடவுள் இணைத்த பந்தத்தை பிள்ளைகள் கூட பிரிக்க வேண்டாமே..

       இனி.....
..... நட்பெனும் சோலைக்குள் கொஞ்சம் நடந்து செல்கிறேன் .எத்தனை வருடங்கள் ,நூற்றாண்டுகள் கடந்தாலும் ஆணும் பெண்ணும் நட்பு என்றதும் உடல்களுடன் தொடர்பு படுத்தியே தவறாகக் காண்கின்ற சமுதாயம் தன் குப்பை  எண்ணங்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்பேன்.
''உடல் ரீதியானது நட்பல்ல ..அது மனம் ,சிந்தனை,அன்பு ரீதியானது
எந்த விண்கலமும்  தேவையில்லை மனம் என்ற வானத்தை கண்டறிய.''
கொஞ்சம் உழுது பயிர் செய்தால் போதுமென்பேன்.

        இறைவன் படைத்த அத்தனை இயற்கையும் அழகாக இருக்கிறதே  ..மனிதன் மட்டும் ஏன்அழகாக மனம் படைக்க மறுக்கிறான்..?
மறக்கிறான்..?
மனிதன் நினைத்தால்  அழகாக உருவாக்கலாம்..
உருவாக்குவானா  ?...

என்  மனதின் வண்ணங்களை புள்ளிக்  கோலங்களாய்  வரைந்திருக்கிறேன் .
இதில் கொஞ்சமாவது வாசகர்களின் எண்ணங்களைக் கவர்ந்திருந்தால் அது வெற்றியே..அத்தனை வேண்டுதல்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்   அழகான கூட்டுக் குடும்பம் கண்முன்னே நிழலாடும் ..
.வாழ்க தமிழ்.  
வாழ்க பாரதி நாமம்

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- மூன்றாம் பரிசு

நான் படைக்க விரும்பும் சமூகம் - அபிராமி உமாசங்கர்

இப்பரந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களின் ஓட்டத்தில் வெற்றியடையும் உயிரணு தான் கருப்பையிலிருந்து வெளி வருகின்றது. வெற்றி பெற்ற மனிதனாக அப்போதே தன்னை நிரூபித்து விடுகின்றது. உயிரில் ஏது ஆண், பெண் வேறுபாடு? சமூகத்தில் இன்றும் பலர் பெண்பிள்ளை என்றால் தயங்காது சிசுக்கொலை என்று முடிவுக்குச் சென்று விடுகின்றார்கள். அதற்குப் பல்வேறு காரணங்களைச் சாக்காகக் கூறிக் கொள்கின்றார்கள். 
அடுத்து மண் ஆசை. இறந்து போனால் மண் தானே நம்மைத் தின்னப் போகின்றது. அதற்குள் எதற்கு இத்தனை உயிர்வதைகள்?
தனி மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள்: ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் இருக்கும். அவற்றில் சிலவற்றையாவது அனுபவிப்பது கட்டாயம். 
இதைப் போன்ற பல விடயங்கள் என் மனதில் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எவ்வாறு செயல்படுத்தி நான் வாழும் இச்சமூகத்தை புதிதாகப் படைக்க விரும்புகிறேன் என்பதை உங்களுடன் பகிந்து கொள்ள விரும்புகிறேன்.

பிரபஞ்சத்தில் பெண் என்பவள் இல்லாவிட்டால், எதுவுமே இல்லை. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே. மேற்குலக நாடுகளில் பெண்களை முதன்மையாகப் போற்றுகின்றார்கள். இந்தியாவிலும் கூட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கின்றது ஆனாலும் கூட, அவர்களின் வாழ்வு போராட்டம் மிக்கதாகவே இருக்கின்றது காரணம், திருமண பந்தத்தில் இணையும் பெண்களுக்கு வரதட்சணை என்னும் கொடுமை வேதனையான நிலைமையாகும். வரதட்சணைத் தடைச் சட்டம் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட போதும் கூட, இன்றும் பெண் பிறந்து விட்டால், மாபெரும் துக்கம் நடந்து விட்டதாகவே கருதுகின்றார்கள். வருங்காலத்தில் அவளுக்கான சீர் வகைகளைத் தயார் செய்வதற்கு பாடுபட வேண்டிய கட்டாயம் அவர்களைச் சிசுக்கொலை வரை செல்லத் தூண்டி விடுகின்றது. 
ஒரு பெண்ணானவள் அவளே பெரும் செல்வம். அப்படியிருக்கும்போது, எதற்காக அளவு கணக்கற்ற நகை, தொகை? கேட்டால், அவர்களது நலனுக்காக என்று பதில் வரும். தன்னையும், தன்னை நம்பி வரும் பெண்ணையும் காப்பாற்ற வகையற்றவன் எப்படி ஆண் என்ற வகைக்குள் அடங்குவான்? காப்பாற்ற வகையற்றவன், அவள் சீராகக் கொண்டு வரும் தொகையையும் விற்றுத் தானே பிழைப்பு நடத்துவான்
நான் படைக்க விரும்பும் சமூகத்தில் வரதட்சணைத் தடைச் சட்டம் என்று எழுத்தில் இருப்பதை செயலாக நடைமுறைப்படுத்துவேன். பெண்களை வெறும் போகப் பொருளாகவும், வீட்டு வேலைகளைச் செய்யும் இயந்திரங்களாகவும் மட்டுமே பார்ப்பதை நிறுத்தி விட்டு, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்கள் மன மகிழ்வுடன் செய்வதற்கு முன்வர ஆவன செய்வேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கின்றாளோ, அதே அளவு ஆண்களும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. பல பேர் கூடுமிடங்களில் தற்செயலாக அவனது கை ஒரு பெண் மேல் பட்டாலும் கூட, என்னவென்று ஒரு வார்த்தை கேளாமலேயே, அடித்து, உதைத்து அவமானப்படுத்தி விடுகின்றனர். பல ஆண்கள் செய்யும் தவறுகளால், அப்பாவி ஆண்மகனும் கூடச் சேர்ந்து பாதிக்கப்படுகின்றான். வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவு சமூகத்தில் ஆண்களைத் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. உத்தியோகம் புருஷலட்சணம் என்று என்றைக்கோ, யாரோ சொல்லிவிட்டுப் போனதையே இன்னமும் பல வீடுகளில் தந்தையர் சொல்லிக் காட்டியே கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய மன வலிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல், குறுக்கு வழிகளில் பணம் தேட விழைகின்றனர். 

பல அரசுத் தொழில் புரிபவர்கள் தமது ஓய்வுக் காலத்தின் பின்பும் சட்டென்று இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் திறமையோடு இருக்கின்றனர். பல்லாண்டு கால அனுபவம் அவர்களுக்குக் கை கொடுக்கின்றது. இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவ்வாறு புதிய வேலைக்கு முயற்சி செய்யும் வயதானவர்கள் இளைஞர்களுக்கு அந்த வேலை வாய்ப்பினைக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாது, தகமையற்றவர்கள் சிபாரிசுடன் இலகுவாக வேளைகளில் அமர்ந்து விட, நாட்டின் பொருளாதாரம், மற்றும் முன்னேற்றம் கணிசமான அளவு பாதிப்புக்குள்ளாகின்றது. இந்தச் சூழல் கண்டிப்பாக மாற வேண்டும். தகுதியானவர்களைக் கை தூக்கி விடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் பாடுபடுவேன். நல்லதொரு இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பேன்.

ஆணும், பெண்ணுமற்ற மூன்றாம் பாலினத்தவர்: இயற்கையின் சூழ்ச்சிக்குப் பலியாகி தங்களின் வாழ்வைத் தொலைத்த துரதிர்ஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும். எவ்வளவு தான் நாம் வேற்றுநாட்டவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலும் கூட மனதளவில் இன்னமும் பிறரை வேடிக்கை பார்க்கும் பாமரர்களாகத் தான் இருக்கிறோம் என்பதற்கு உதாரணம், சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை நாம் நடத்தும் விதம். பொதுக் கழிப்பறைகளில் கூட அவர்களுக்கென்று ஓரிடம் ஒதுக்குவதற்கு யார் மனதும் விசாலம் இல்லை. கழிப்பறையே இந்த நிலைமையென்றால் மீதியை நான் சொல்லவும் வேண்டுமா? ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் இருக்கத் தான் செய்கின்றன என்று நான் முன்னரே குறிப்பட்டது போல், இவர்களிலும் திறமை மிக்கவர் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு நம்நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். சமூகத்தில் இருக்கும் அனைவருமே நாட்டின் தூண்கள் தானே. மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினர், வறியவர்கள் என்று பாகுபாடு காட்டி அவர்களைத் தவிர்த்தால், நாடு எவ்வாறு முன்னேற்றமடையும். தூண்களே இல்லாத கட்டடமாகத் தானே பலமிழந்து போகும்? பல்லாயிரம் உயிரணுவில் வெளி உலகைப் பார்க்கும் அத்தனை உயிரணுவும் வெற்றியடைந்தவை தான்.  பிறகு ஏன் நீ சிறியவன், நான் பெரியவன் என்ற போட்டி? இவையெல்லாம் அற்ற நல்லிணக்கமான சமூகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுடைய கைகளிலும் தான். 

இன்று தனி மனிதனை மட்டுமல்லாது, அரசாங்கத்தையும் வேருடன் ஆட்டிப் படைப்பது சாதி என்ற வன்முறை. இன்று 132வது வயதில் இருந்திருக்கக் கூடிய பாரதியார், சுமார் நூற்றியைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ''சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்றார். ஆனால், இன்று வரையிலும் சாதி என்ற பேயினை ஓட்டுவதற்கு முன்வந்திருக்க வேண்டிய அரசாங்கமே, இன்று சாதிச் சங்கங்களைத் தான் நம்பியுள்ள கேவலமான நிலைமை. தேநீர்க் கடைகளில் தனிக் கோப்பை, ஒவ்வொரு சாதிகளுக்கென்று தனியான தொழில், தனியாகத் தெரு. உலக அரங்கில் இந்தியா என்ற ஒரு நாட்டிற்குள் இத்தனை பிரிவினை. சமூகத்தின் மாபெரும் கறை இந்தச் சாதிப் பாகுபாடு. ஆன்மிகவாதிகளின் கருத்து: உயிர் நிரந்தரமானது. உருவமற்ற உயிருக்கு உறைவிடம் தான் உடல். அழிந்து போகக் கூடிய உடலில் காற்றுவெளியில் அலைந்து கொண்டிருக்கும் உயிர் குடிவருகின்றது இது தான் பிறப்பின் ரகசியம் என்று. அத்தகைய நிலையட உயிர் சிலகாலம் மட்டிலுமே குடிவரும் உடலுக்கு சாதி எதற்கு? மேல் சாதி என்று தம்மைத் தாமே கூறிக் கொள்பவர்கள், எத்தனை பேர், மேன்மையான குணங்களைப் பெற்றிருக்கின்றார்கள்? அல்லாது, கீழ்சாதி எனக் கூறி சமூகத்தில் ஒதுக்கி வைத்திருக்கும் பலபேர் இன்றளவும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கின்றார்கள். ஆகவே, ஒரு மனிதனை சாதியின் பெயரைச் சொல்லி அவமானப் படுத்துவதை விட்டு, அவனுக்குள்ள திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி சமூகத்தில் படிந்துள்ள அழுக்குக் கறைகளை நீக்கி புத்துயிர் ஊட்டுவதற்கு முயற்சிப்பேன். 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்து விடு என்று பாடியிருக்கும் பாரதியாரை பாடல்களில் மட்டுமே அவ்வப்போது நினைத்து விட்டு, மறந்து விடுகின்றோம். ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலர், ஒரு நேரச் சோற்றுக்காய் கையேந்தும் மனிதரை ஒரு உயிராகக் கூட மதிப்பதில்லை. தெரு ஓரங்களிலும், சாக்கடைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரும் நம்நாட்டுக் குடிமகன் என்ற பாசம் கடுகளவு கூட இல்லாமல் சுயநலவாதிகளாகவே இருந்து விடுகின்றோம். நம்மால் முடிந்த உதவிகளை ஒவ்வொருவரும் செய்து வந்தாலே, வறுமை படிப்படியாக ஒழியும். வறுமைப்பட்ட குடும்பத்தின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலாவது சேர்த்து அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து நாட்டின் எதிர்கால வாரிசுகளை தகுதி மிக்கவர்களாக மாற்றுவதற்கான முயற்சி எத்தனை பேர் செய்கின்றார்கள்?

ஏழைகள் என்றுமே ஏழைகளாகவே மடிய வேண்டுமா? அவர்களுக்கான வசதிகள் அரசு தான் செய்ய வேண்டுமென எண்ணாமல், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நம் நாடு வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் உள்ளது. ஆகவே நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வேலை, அதற்கான ஊதியம் கிடைப்பதற்கு வழிவகை செய்து கொடுத்து அனைவரையும் கைதூக்கி விடுவது பலமும், மற்றும் அதற்கான வசதி உள்ளவர்களின் கடமை. 

வெடிகுண்டுக் கலாச்சாரமென பரப்புரை செய்யப்பட்டு வரும் தீவிரவாதம், நாட்டின் இறையாண்மையை மிகவும் கீழ் மட்டத்திற்குக் கொண்டு சென்று விட்டது. சகோதரத்துவத்தை நாசம் செய்யும் வஞ்சகர்கள் மலிந்து விட்டனர். நாம் எல்லாரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படும் நேரமிது. நமக்குள் சண்டை போடுவதும், சாதிகளாகப் பிரிந்து நிற்பதும் எதிரிகளை நம்மை நோக்கி நெருங்க வைக்கும் பாலமாகும். இதை உணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு இந்தியனும் தனிமனித ராணுவமாகத் தான் கருதப்பட வேண்டும்.  தீவிரவாதமற்ற சமூகம் என்று பிறக்குமோ, அன்று தான் நாடு வல்லரசாக மாறக் கூடிய சாத்தியம் புலப்படும். 

வீடு சிறப்பாக இருப்பதற்கு எப்படி ஒவ்வொரு வீட்டு அங்கத்தினர்களும் அயராது உழைக்கின்றார்களோ, அதுபோல் சமுதாயம் சிறப்பாக இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைத்து நாம் சார்ந்த சமூகத்தையும் நாட்டையும் முன்னேற்றுவோமென நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் எழுத்து என்ற ஆயுதத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி இன்றளவும் இந்தியா மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நினைவுகளில் கலந்திருக்கும் பாரதியாரின் பிறந்தநாளில் புதிய சபதமொன்றை எடுப்போமாக!


அக்கினி என்பது மிகச் சிறிய பொறியாக இருப்பினும் காட்டையே எரித்து விடுவது போல, நாம் செய்யும் சிறு செயல் கூட மிகப் பெரிய திருப்புமுனையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடி வெற்றி காண்போம்; புதியதாய் ஒரு சமுதாயத்தை புத்துயிர் ஊட்டுவோம்.